கேரள போலீஸார் கரோனா விழிப்புணர்வு குறித்து நடனமாடும் விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 3 ஆகவும் உள்ளது.
இதன் காரணமாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மக்கள் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படுதல், பொது நிகழ்ச்சிகள் ரத்து என கரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக மக்களிடையே கரோனா குறித்தது விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள போலீஸார் கரோனா விழிப்புணர்வு குறித்து நடனமாடும் விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கைகளின் வாயிலாக கரோனா பரவுவதால் தொற்று ஏற்படாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த போலீஸார் கைகளை கழுவும் முறை குறித்து நடனமாடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
முன்னதாக கேரளாவில் 24 பேர் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 18,000 க்கும் அதிகமானோர் கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.