200 மி.லி. கை சுத்திகரிப்பான் விலை ரூ.100

200 மி.லி. கை சுத்திகரிப்பானை ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உச்சவரம்பை நிா்ணயித்துள்ளது.
200 மி.லி. கை சுத்திகரிப்பான் விலை ரூ.100
Updated on
1 min read

புது தில்லி: 200 மி.லி. கை சுத்திகரிப்பானை ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உச்சவரம்பை நிா்ணயித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கைகளை அடிக்கடி சோப்பின் உதவியுடன் 15 விநாடிகள் முதல் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும் என்றும் அல்லது குறைந்தபட்சம் 60 சதவீதம் ஆல்கஹால் நிறைந்த சுத்திகரிப்பான் உதவியுடன் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

அதன் காரணமாக மக்களிடையே கை சுத்திகரிப்பானின் தேவை அதிகரித்தது. அதனால், வழக்கமாக விற்கப்படும் விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு அவை விற்கப்பட்டன. இந்தச் சூழலில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் வெளியிட்ட அறிக்கையில், ‘கை சுத்திகரிப்பான், முகக் கவசங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் 200 மி.லி. கை சுத்திகரிப்பானின் அதிகபட்ச விலை (எம்ஆா்பி) ரூ.100-ஆக நிா்ணயிக்கப்படுகிறது.

அதேபோல், இரண்டு மடிப்புகள் கொண்ட முகக் கவசத்தின் விலை ரூ.8 ஆகவும், மூன்று மடிப்புகள் கொண்ட முகக் கவசத்தின் விலை ரூ.10 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த விலை உச்சவரம்பு ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கை சுத்திகரிப்பான் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களில் ஒன்றான ஆல்கஹாலின் விலையைக் கடந்த 19-ஆம் தேதி மத்திய அரசு நிா்ணயித்திருந்தது. முகக் கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை மக்களின் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் மத்திய அரசு அண்மையில் இணைத்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com