இந்த நீரைக் குடித்தால் கரோனா குணமாகி விடுமாம் : பரவும் விபரீத வதந்திகள்
லக்னோ: இந்தியா முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸைப் போல் அது தொடர்பான வதந்திகளும் ஆங்காங்கே பரவி வருகின்றன.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 511 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியா முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸைப் போல் அது தொடர்பான வதந்திகளும் ஆங்காங்கே பரவி வருகின்றன.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பட்டு வருகின்றன
உதாரணமாக ஆக்ரா, மீரட் மற்றும் முசாபார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் உறங்குவதே இல்லை.ஏன் என்றால் யாரெல்லாம் உறங்குகிறார்களோ அவர்கள் கல்லாக மாறிவிடுகிறார்கள் என்ற வதந்திதான் இதற்கு காரணம். அதேபோல வீட்டிற்கு வெளியே வேப்பிலைகளை கட்டி வைப்பதன் மூலமும் இவர்கள் கரோனா வைரசை துரத்த நினைகின்றனர்.
மேலும் பாக்பட் உள்ளிட்ட பகுதிகளில் அங்குள்ள தேவி கோவில்களுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்றும், வீட்டில் எத்தனை குழந்தைகள் உள்ளனரோ அத்தனை விளக்குகள் கோவிலில் ஏற்ற வேண்டும் என்றும் வதந்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பான அறிவிப்புகள் கோவில்களில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆக்ரா உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ராமாயணத்தின் பால காண்டம் நூல் பகுதியில் இருந்து, முடி இழைகள் விழுவதாகவும் அவற்றை எடுத்து நீரிள் இட்டு கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகினால் கரோனா வைரஸ் குணமாகி விடும் என்றும் தகவல்கள் உலவுகின்றன. ஆனால் அந்தப் பகுதியில் நிறையப் பேர் இவ்வாறு பாலகாண்டம் நூலில் இருந்து முடி இழைகள் கிடைத்திருப்பதாக சொல்லி வருவது கவனத்திற்குரியது.
இந்நிலையில்ஆக்ரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவி குமார் இத்தகைய வதந்திகளை பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.