தாரியா: உத்தரபிரதேசத்தில் ஊரடங்கை மதிக்காமல் பெண் சாமியார் ஒருவர் வாளைக் காட்டி போலீசாரை மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 539 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் ஊரடங்கை மதிக்காமல் பெண் சாமியார் ஒருவர் வாளைக் காட்டி போலீசாரை மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் தாரியா பகுதியில் ‘மா ஆதி ஷக்தி’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பெண் சாமியார் ஒருவர் ஆசிரமம் வைத்துள்ளார். அங்கு பக்தர்கள் ஒன்று கூடும் நிகழ்வு ஒன்று புதனன்று நடந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை சுட்டிக் காட்டி போலீசார் அங்குள்ள பக்தர்களை கலைந்து போகுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதனை கேட்காத பெண் சாமியார் அங்கிருந்த போலீசாரை தன் கையில் உள்ள வாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இறுதியில் போலீசார் அங்கிருந்த கூட்டத்தை சிறிய அளவில் லத்தி பிரயோகம் செய்து கலைத்தனர் .
இதுதொடர்பான விடியோஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் அந்த பெண் சாமியார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.