புது தில்லி: சரியான திசையில் முதல்படி என்று கரோனா பாதிப்பிற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்படும் பல்வேறு தரப்பினருக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு உதவிகள் அடங்கிய நிதிதொகுப்புகளை வியாழன் மதியம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சரியான திசையில் முதல்படி என்று கரோனா பாதிப்பிற்கான மதிய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நிதி உதவித் தொகுப்பு குறித்த இன்றைய அரசாங்க அறிவிப்பு சரியான திசையில் முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.