கொசுக்களினால் கரோனா ஒருபோதும் பரவாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் அதேநேரத்தில் கரோனா குறித்த சில வதந்திகளும் மக்களிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதில், கொசுக்களினால் கரோனா பரவுமா? என்பது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொசுக்களின் மூலமாக கரோனா வைரஸ் பரவாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடக் கூறியுள்ளது. எனவே, கொசுக்களினால் கரோனா பரவும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கரோனா வதந்திகள் குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'கரோனா ஏற்பட்ட ஒருவரிடம் இருந்து மட்டுமே மற்றொருவருக்கு வைரஸ் தொற்று பரவுகிறது. அதேபோன்று கரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் இல்லையென்றாலும், அவரிடமிருந்து மற்றொருவருக்கு கரோனா பரவும்.
பூண்டு மற்றும் மது கரோனா பரவாமல் தடுக்க உதவும் என்று கூறுவது வதந்தியே. பூண்டு சாப்பிடுவதாலோ, மது அருந்துவதாலோ காரோனா பரவுதலை தடுக்க முடியாது.
மேலும், ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகித்தால் அவர் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். அதாவது ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏதேனும் இருந்தால் அவர் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், மருத்துவ சேவை புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள், மக்களுக்காக பணியாற்றும் காவல்துறையினர், அரசு ஊழியர்கள், வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணியலாம். முக்கியமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது நலம். மற்றவர்கள் முகக் கவசம் அணிவதால் பெரிய பயன் எதுவுமில்லை' என்று தெரிவித்துள்ளது.