
கோப்புப் படம்
எரிச்சலை ஏற்படுத்தும் ரசாயனத்தை தொழிலாளர்கள் மீது தெளித்தது ஏன்? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி மற்றும் நொய்டாவில் இருந்து தொழிலாளர்கள் பலர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். ரேபரேலியில் உள்ள பேருந்து நிலையத்தில் அவர்கள் பேருந்துக்காக காத்திருந்தபோது பாதுகாப்பு ஊழியர்கள் சிலர் வந்து அவர்கள் மீது ரசாயனக்கலவையை தெளித்தனர். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்கங்களில் பல்வேறு கேள்விகளை, விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக, மக்கள் மீது தெளிக்கப்பட்டது ரசாயனம் அல்ல; கிருமிநாசினி என்று உ.பி. அரசு தெரிவித்தது. ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தில்லி மற்றும் நொய்டாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களின் மீது ரசாயனம் தெளித்தது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஏதேனும் வழிமுறையை வழங்கி உள்ளதா? ரசாயனங்கள் உடலில் எரிச்சலை ஏற்படுத்தும் என்ற நிலையில் எவ்வாறு அதனை உபயோகித்தார்கள்? அவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து அதன் பின்னர் அவர்களுக்கு மாற்று உடைகள் வழங்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?' என அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G