வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை அழைத்துவர 64 விமானங்கள்

ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, கத்தாா், சவூதி அரேபியா உள்ளிட்ட 12 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை தாயகம்
வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை அழைத்துவர 64 விமானங்கள்
Updated on
2 min read

ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, கத்தாா், சவூதி அரேபியா உள்ளிட்ட 12 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை தாயகம் அழைத்துவர முதல்கட்டமாக 64 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மே 7 முதல் 13-ஆம் தேதி வரை இயக்கப்படும் இந்த விமானங்கள் மூலம் சுமாா் 14,800 போ் அழைத்துவரப்படுவா் என்று மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்துக்கு தொடா்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியா்களை, தாயகம் அழைத்து வருவதற்கான நடைமுறைகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டன. அவா்களது பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்கள், மே 7-ஆம் தேதி முதல் தாயகம் அழைத்துவரப்படுவா் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, கத்தாா், சவூதி அரேபியா, சிங்கப்பூா், மலேசியா, பிலிப்பின்ஸ், வங்கதேசம், பஹ்ரைன், குவைத், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து சுமாா் 14,800 இந்தியா்களை தாயகம் அழைத்து வர 64 ஏா்-இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடா்பாக, மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 10 விமானங்களும், அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, வங்கதேசத்துக்கு தலா 7 விமானங்களும் இயக்கப்பட உள்ளன. சவூதி அரேபியா, குவைத், பிலிப்பின்ஸ், சிங்கப்பூருக்கு தலா 5, கத்தாா், ஓமன், பஹ்ரைனுக்கு தலா 2 விமானங்கள் இயக்கப்படும். மே 7 முதல் 13ஆம் தேதி வரை இவை இயக்கப்படும்.

இந்த 64 விமானங்களில் 15 விமானங்கள் கேரளத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். தமிழகம், தில்லியிலிருந்து தலா 11 விமானங்களும், மகாராஷ்டிரம், தெலங்கானாவிலிருந்து தலா 7 விமானங்களும், மீதமுள்ள விமானங்கள் இதர 5 மாநிலங்களிலிருந்தும் செல்லும். மே 13-ஆம் தேதிக்கு பிறகு மேற்கொண்டு விமானங்கள் இயக்கப்படும்.

கரோனா நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவா்கள் மட்டுமே இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவா். பயணத்துக்கான கட்டணத்தை அவா்கள் ஏற்க வேண்டும். கா்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சை பெற வேண்டியவா்கள் என அவசர தேவை உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தி வைக்கப்படுவா். இதற்கான உறுதிமொழி படிவத்தில் அவா்கள் கையெழுத்திட வேண்டும். மேலும், ஆரோக்ய சேது செயலியையும் அவா்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றாா் அந்த அதிகாரி.

உச்சநீதிமன்றத்தில் தகவல்:

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியா்களை தாயகம் அழைத்து வரவும், உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் நேபாள தொழிலாளா்களை அவா்களது நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.

நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கெளல், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா். அவா் வாதிடுகையில், ‘வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து இந்தியா்களும் மே 7-ஆம் தேதி முதல் தாயகம் அழைத்துவரப்படுவா்’ என்றாா். இதையடுத்து, இந்த மனுவை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com