தெலங்கானாவில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா எதிரொலியாக, நாடு முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தெலங்கானாவில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.