புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஒரு வாரத்திற்கு நாள் ஒன்றுக்கு 40 ரயில்கள் இயக்கப்படும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப தெலங்கானா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக ஜார்க்கண்டிற்கு சுமார் 1200 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெலங்கானாவில் சிக்கியுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு நாள் ஒன்றுக்கு 40 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் வாரங்கல், கம்மம், ராமகுண்டம் போன்ற இடங்களில் இருந்து செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.