

லண்டன்-: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதி செய்து பிரிட்டன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அவரது மேல்முறையீடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வரும் 14-ஆம் தேதிக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என பிரிட்டன் சட்டத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். மல்லையா மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த விசாரணை அமைப்புகளின் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2017 ஏப்ரலில் பிரிட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மல்லையா, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
வழக்கு விசாரணையின் முடிவில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2018 டிசம்பரில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவிட்டது.
எனினும், அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதற்காக 14 நாள்களுக்குள் விண்ணப்பிக்கும் வாய்ப்பு மல்லையாவுக்கு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை (மே 4) அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.