கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நிற்கதியாக கைவிடப்பட்டனர்.
வாழ்வாதாரம் தேடி வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று கிடைத்த வேலை எல்லாம் செய்து, வீட்டுக்கு பணம் அனுப்பினால் போதும் என்ற குறைந்தபட்ச தேவையோடு வந்த தொழிலாளர்களை, குறைந்த ஊதியத்தில் அதிக பணி நேரம் வைத்து வேலை வாங்கிய நிறுவனங்கள் கூட இருப்பிடத்தையோ, உணவையோ உறுதி செய்யாமல், கம்பெனி திறந்ததும் வாருங்கள் என்று வெளியே தள்ளி கதவை மூடிவிட்டன.
கையில் காசில்லை, தங்குமிடமில்லை, வேலையுமில்லை, உணவுமில்லை என்ற நிலையில், இந்திய வரைபடத்தில் ஒரு திசையில் இருக்கும் மற்றொரு திசையில் இருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இவ்வாறு நடைப்பயணமாக சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரிட்ட சொல்லொணாத் துயரங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். வழியில் குழந்தை பெற்ற கர்ப்பிணி, கைக்குழந்தையோடு 1200 கி.மீ. நடந்து சென்ற தாய் என கண்ணீர் கதைகள் ஏராளம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதுரவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் எழுப்பினாலும், எதுவும் அவர்களுக்கு பலனளிக்கவில்லை. அவர்களது கண்ணீர் துளிகளைத் துடைக்க முடியவில்லை.
ஊரடங்கு தொடங்கிய போது அபலைகளாக புலம்பெயர் தொழிலாளர்கள் மத்திய மற்றும் சில மாநில அரசுகளால் கைவிடப்பட்டாலும், தாங்கள் வளர்த்த செல்லப் பிராணிகளைக் கூட விட்டுவிட மனமில்லாமல் சொந்த ஊருக்கு சுமந்து சென்று சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.
மும்பை நாசிக் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் குடும்பம் ஒன்று கையில் ஒரு சிறிய நாய்க்குட்டியையும், வாத்தையும் சுமந்து சென்ற புகைப்படம் டிவிட்டரில் வைரலானது.
செல்லமாக வளர்த்துவந்த நாய்க்குட்டியை அங்கேயே விட்டுவர மனமில்லாமல், செல்லும் பாதை தூரம் என்று தெரிந்தும் சுமந்து செல்ல சம்மதித்து இந்த முடிவை எடுத்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கும் முன் மாதிரியாக மாறியுள்ளனர்.