மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 55 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,328 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் தற்போது 35,058 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,249 பேர் உயிரிழந்துள்ளனர்.