சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்பு: குடும்பத்தினர் அதிர்ச்சி
குஜராத் மாநிலத்தில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 67 வயது நோயாளி, பேருந்து நிலையம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
தங்களது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று நினைத்திருந்த பிள்ளைகளுக்கு, மே 15ம் தேதி பேருந்து நிலையம் ஒன்றில் அவரது சடலம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
அகமதாபாத்தில் டனிலிம்டா பகுதியைச் சேர்ந்தவர் குண்வடந்த் மக்வானா. இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மே 10ம் தேதி அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான், மே 15ம் தேதி அவரது சடலம் பேருந்து நிலையத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை மருத்துவரிடம் கேட்டபோது, அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறி மே 14ம் தேதி அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான், அவர் வசித்து வந்த பகுதிக்கு அருகே பேருந்து நிலையத்தில் மே 15ம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடும்பத்தாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதுபற்றி குடும்பத்தார் கூறுகையில், தந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பியிருப்பது குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. போக்குவரத்து வசதி இல்லாத சமயத்தில் ஒரு நோயாளியை மருத்துவமனை நிர்வாகம் அல்லவா வீட்டில் வந்து சேர்க்க வேண்டும். எங்களையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். மருத்துவமனையில் என்னதான் நடந்தது என்று தெரியவில்லை என்கிறார்கள்.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.