புது தில்லி: நாடு முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்படாமல் இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள, ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படுகிறது.
அதே சமயம், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் கட்டாயம் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பள்ளிகளை திறப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில், மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்த முடியாமல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு மாநில அரசுகள் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள தளர்வு அறிவிக்கப்படுகிறது.