புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு எந்த விளம்பரமும் கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையை ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தன்று ராகுல் காந்தி அவரைப் பற்றி கூறியிருப்பதாவது, "உண்மையான தேசபக்தர், ஜனநாயகவாதி, தனது தொலைநோக்குப் பார்வை மூலம் தன்னம்பிக்கையோடு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர்.
எனது நினைவில் இருந்து நீங்காத எனது அருமை தந்தை ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு இந்த நாளில்தான் அமரர் ஆனார்.
அவர் மிகச் சிறந்த தந்தை, கனிவானவர், கருணைமிக்கவர், இரக்க குணம் மிக்கவர், அமைதியானவர். அவர் இல்லாததை நான் உணர்கிறேன், ஆனால் அவர் எப்போதும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடனான எனது நினைவுகள் மிகவும் அற்புதமானவை" என்று ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"உண்மையான தேசபக்தரின் மகன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அன்பும், மரியாதையோடு இன்று அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன்" என்றும் ராகுல் கூறியுள்ளார்.
இதுபோலவே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் டிவிட்டர் மூலம் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், தனது தந்தையுடனான புகைப்படத்தை பதிவிட்டு, இதுவே நான் அவருடன் எடுத்துக் கொண்ட கடைசிப் புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.