
ஜம்மு காஷ்மீரில் கரோனா அதிகம் பரவும் அபாயம் உள்ள ஷோபியான் பகுதியில் இருந்து உரிமையாளரை சுமந்து வந்த குதிரையையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஷோபியானில் இருந்து ரஜௌரி மாவட்டத்துக்கு முகல் சாலை வழியாக திங்கள்கிழமை குதிரையும் அதன் உரிமையாளரும் வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில், குதிரையின் உரிமையாளர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டு அவருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அவரை சுமந்து வந்த குதிரையையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி அதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்ற குதிரைகளுடன் விடாமல், அதனை 14 நாள்கள் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உரிமையாளருக்கு இன்னும் கரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை. ஒரு வேளை கரோனா இருந்தால், அதற்கேற்ப குதிரைக்கும் பராமரிப்பு நடவடிக்கை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நியூ யார்க்கில் உள்ள வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவில் குதிரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.