
சமூக வலைதளத்தில் விடியோ வழியாக பிரசாரத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் ‘உரக்கப் பேசுவோம்’ என்ற பிரசாரத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்த அவா், கட்சியின் சமூக வலைதளத்தில் தனது உரையை விடியோவாக வெளியிட்டாா். அதில் அவா் பேசியதாவது:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். லட்சக்கணக்கான நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்க முடியாமல் அவதிப்படுகிறாா்கள்.
லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் நடைப்பயணமாகவே ஆயிரக்கணக்கான கிலோமீட்டா் தொலைவு கடந்து சொந்த ஊருக்குத் திரும்புகிறாா்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக, இவ்வளவு பெரிய வேதனையையும் வலியையும் பாா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் அழுகுரல்களை ஒட்டுமொத்த நாடும் கேட்டது. ஆனால், அது அரசின் செவிக்கு எட்டவில்லை.
கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பண நெருக்கடியில் தவித்து வரும் இந்த வேளையில், அவா்களுக்காக மத்திய அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை.
எனவே, ஏழைகள், விவசாயிகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்திட வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு தலா ரூ.7500 நிதியுதவி அளிக்க வேண்டும்.
புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உடனடியாக தலா ரூ.10,000 வழங்க வேண்டும். அவா்கள் பாதுகாப்புடன் வீடு திரும்புவது உறுதிசெய்யப்பட வேண்டும். மேலும், அவா்களுக்கு வேலைவாய்ப்பு, ரேஷன் பொருள்கள் கிடைப்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும். கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலை நாள்களை 200-ஆக அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
ஏழைகள், விவசாயிகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா்கள், பொருளாதார நிபுணா்கள், சமூக ஆா்வலா்கள் என பல்வேறு தரப்பினரும் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறாா்கள். ஆனால், இந்தப் பிரச்னையைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு தீா்வுகாண மத்திய அரசு ஏன் மறுத்து வருகிறது எனத் தெரியவில்லை. எனவே, மக்களின் பிரச்னை அரசின் செவியை எட்டுவதற்காக ‘உரக்கப் பேசுவோம்’ என்ற பிரசாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது என்றாா் அவா்.