மும்பை: மும்பையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அனைத்து படுக்கை வசதிகளும் நிரம்பிவிட்டதாக மும்பை மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 27ம் தேதி நிலவரப்படி, மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் 645 படுக்கை வசதிகளில் 99% படுக்கைகள் நிரம்பிவிட்டன, ஆக்ஸிஜன் வசதியுடனான படுக்கை வசதிகளில் 4,292ல் 65% படுக்கைகள் நிரம்பி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நல்ல நிலையில் இருக்கும் 373 வென்டிலேட்டர்களில் 72 சதவீதம் வென்டிலேட்டர்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் 1,438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 35,273 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 38 பேர் பலியாகியுள்ளனர்.