பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் கூடியுள்ளனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பகல் 1 மணி வரை சுமார் 25 சதவிகித வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
இதையடுத்து, மாலை 4 மணி வரை 42 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
சமீபத்திய நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 126 இடங்களிலும், மகா கூட்டணி 107 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில், தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் கட்சிக் கொடிகளுடன் தொண்டர்கள் கூடியுள்ளனர். தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.