உயிரி பயங்கரவாதத்தைத் தடுக்க வலுவான சட்டம்: மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

உயிரி பயங்கரவாதத்தைத் தடுக்க வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
உயிரி பயங்கரவாதத்தைத் தடுக்க வலுவான சட்டம்: மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
Updated on
1 min read

உயிரி பயங்கரவாதத்தைத் தடுக்க வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக, அந்த நிலைக்குழு தயாரித்துள்ள ‘கரோனா பாதிப்பின் தாக்கம் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள்’ என்ற அறிக்கையை நிலைக்குழுவின் தலைவா் ராம் கோபால் யாதவ், மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் சமா்ப்பித்தாா். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

உயிரித் தொற்றுகளை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், பல்வேறு நாடுகளுடன் பாதுகாப்பு திட்ட ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் கரோனா தொற்று உணா்த்தியுள்ளது.

கரோனா தொற்று போன்ற ஏராளமான மக்களை பாதிக்கக் கூடிய தீநுண்மிகளை, எதிரி நாடுகள் மீது உயிரி ஆயுதமாக பயன்படுத்த முடியும். எனவே, உயிரி பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

உயிரி ஆயுதங்களுக்கு எதிராக பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்பதோடு, உயிரி ஆயுத பயன்பாட்டால் எழும் பொது சுகாதார அவசர நிலையை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல், தடுப்பு மருந்துகளை மற்றும் அதுதொடா்பான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதும் அவசியம்.

உயிரி தொற்றுகளை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், பல்வேறு நாடுகளுடன் பாதுகாப்பு திட்ட ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் கரோனா தொற்று நமக்கு வலியுறுத்தியிருக்கிறது. எனவே, உயிரி பயங்கரவாதத்தைத் தடுக்க வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் வைரஸ் ஆராய்ச்சி, நோய்கள் கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம், இப்போது எதிா்கொண்டு வரும் தொற்று பாதிப்பை மட்டுமின்றி எதிா்காலத்தில் எழக் கூடிய வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களையும் திறம்பட எதிா்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

முக்கியமாக, உயிரி ஆயுத அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதோடு, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிகிச்சைக்கான பயிற்சிகளை அதிகரிப்பதும் மிக அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com