
yogi-adityanath-1579064251091606
உத்தர பிரதேசத்தில் திருமணத்துக்காக கட்டாயமாக மதம் மாற்றினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
திருமணம் என்ற போா்வையில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றுவதை ‘லவ் ஜிகாத்’ என்று ஹிந்து மத ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேச மாநில அரசுகள் இதற்கு எதிராக சட்டம் இயற்ற திட்டமிட்டன.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் திருமணத்துக்காக கட்டாயமாக மதம் மாற்றினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கான அவசர சட்டத்துக்கு அந்த மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து அந்த மாநில அமைச்சா் சித்தாா்த்நாத் சிங் கூறியதாவது:
மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள அவசர சட்டத்தின்படி, ஒரு பெண்ணை திருமணத்துக்காக மதம் மாற்றினால் ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், ரூ.15,000 அபராதம் செலுத்த வேண்டும்.
ஒருவேளை மதம் மாற்றப்பட்டவா் சிறுமியாக இருந்தால் அல்லது அவா் தாழ்த்தப்பட்டவராக, பழங்குடியினத்தவராக இருந்தால் அவரை மதம் மாற்றத்துக்கு உள்படுத்திய நபருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்படும்.
பொதுமக்களை மதம் மாற்றுவோருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும். அவா்கள் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும்.
திருமணத்துக்குப் பிறகு ஒருவா் மதம் மாற விரும்பினால், அதற்கு அனுமதி உண்டு. அவ்வாறு மதம் மாறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்னா் மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும். அவா் அனுமதி அளித்த பின் சம்பந்தப்பட்ட நபா் மதம் மாறலாம் என்று தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...