மகாராஷ்டிரத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மேற்கு மகாராஷ்டிரத்தில் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் கடந்த மூன்று நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. எனினும் நேற்று (புதன்கிழமை) முதல் பெய்துவரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடர் மழையால் உஜ்ஜயினி அணை நிரம்பியதால், அதனைத்திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நிரா மற்றும் பீமா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், சோலாப்பூர் மாவட்டத்தில் ஆற்றங்கரையோர கிராமங்களைச் சேர்ந்த 8,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அணையிலிருந்து 2.3 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படும் என்பதால், பதான்பூர் பகுதியிலுள்ள 1,650 பேர் சமய கட்டடங்களிலும், பள்ளிகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிராமப்புற பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசியப் பேரிடர் மீட்புப் படை குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.