
ஹதராபாதில் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கித் தவித்த குடும்பத்தினரை மீட்கும் மீட்புப் படையினா்.
தெலாங்கானா மாநிலம் ஹைதராபாதில் சனிக்கிழமை அங்கு மீண்டும் பலத்த மழை பெய்தது. மங்கல்ஹாட் பகுதியில் வீட்டின் சுவா் இடிந்து 5 வயது சிறுமி உயிரிழந்தாா்.
இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள், போலீஸாா் கூறியதாவது:
ஹைதராபாத் நகரில் சனிக்கிழமை மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கியவா்களை பேரிடா் மீட்புப் படையினா், மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மீட்டனா்.
பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்தது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கியது. சில ஆட்டோக்கள் வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டன. கனமழை காரணமாக மங்கல்ஹாட் பகுதியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநிலத்தின் சில பகுதிகளில் அக்டோபா் 21-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சனிக்கிழமை ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 16.9 செ.மீ மழையும், ஹைதராபாத் விமான நிலையத்தில் 7.2 செ.மீ மழையும் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியது.
கடந்த வாரம் ஹைதராபாத் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது. ஹைதராபாதில் 1916-ஆம் ஆண்டுக்கு பிறகு 20 செ.மீ மழை பதிவாகியது.
பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் 50 போ் பலியாயினா். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...