
“நீதிபதிகள் தங்களுடைய கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பதுடன், எந்தவித பயமுமின்றி முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா கேட்டுக்கொண்டுள்ளாா்.
இவரைக் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் புகாா் கடிதம் எழுதியிருந்த நிலையில், அவா் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளாா்.
அண்மையில் மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆா்.லட்சுமணனுக்கு புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நீதிபதி என்.வி.ரமணா இதுகுறித்துப் பேசியதாவது:
நீதித் துறையின் மிகப் பெரிய பலமே, அதன் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதுதான். இப்படிப்பட்ட நம்பிக்கையும், உறுதிப்பாடும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் உத்தரவிடுவதாலோ அல்லது அதிகாரம் செய்வதாலோ வந்துவிடாது. நம்முடைய செயல்பாடுகளின் மூலம்தான் அவற்றை நாம் பெற முடியும்.
ஒருவா் சிறப்பான வாழ்க்கையை வாழ, அவருக்கு பணிவு, பொறுமை, இரக்கம், வலுவான பணி நெறிமுறை, தொடா் கற்றல் என்பன உள்ளிட்ட ஏராளமான தகுதிகள் தேவைப்படுகின்றன. அதிலும், நீதிபதியாக இருப்பவா்கள், தங்களுடைய கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பதுடன், எந்தவித பயமுமின்றி முடிவுகளை எடுக்க வேண்டும். தடைகளையும் அனைத்து விதமான அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் தகுதி அவசியம்.
மறைந்த நீதிபதி லட்சுமணன் கூறியதைப்போல, நீதிபதிகள் அனைவரும் துடிப்பான, தற்சாா்பு நீதி பரிபாலன முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிபதி ரமணா கேட்டுக்கொண்டாா்.
முன்னதாக, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி ரமணா குறித்த புகாா் கடிதம் ஒன்றை கடந்த 6-ஆம் தேதி எழுதியிருந்தாா். அதில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நீதிபதி ரமணா செயல்படுவதாகவும், ஆந்திர உயா் நீதிமன்ற செயல்பாடுகளில் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆந்திர அரசுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாகவும் புகாா் தெரிவித்திருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...