'மீ டூ' விவகாரம் குறித்து சக்திமான தொடரில் சூப்பர் ஹீரோவாக நடித்த முகேஷ் கண்ணா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு சமூக ஊடகங்களில் விமரிசனங்கள் எழுந்துள்ளன.
பெண்கள் தங்களது பணியிடங்களில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை 'மீ டூ' என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். இது பிரபலமடைந்து மாபெரும் இயக்கமாக மாறியது. மீ டூ மூலம் வைக்கப்படும் புகார்களை விசாரிப்பதற்காக மத்திய அரசு தரப்பில் குழு கூட அமைக்கப்பட்டது.
எனினும், மீ டூ குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளும், விமரிசனங்களும் எழுவது இருந்து வருகிறது. இந்த நிலையில், சக்திமான் தொடரில் சூப்பர் ஹீரோவாக நடித்த முகேஷ் கண்ணா மீ டூ விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகும் விடியோவில் மீ டூ குறித்து அவர் பேசியதாவது:
"பெண்களின் வேலை என்பது வீட்டைக் கவனித்துக்கொள்வது. பெண்கள் வேலை செய்யத் தொடங்கிய பிறகுதான் மீ டூ பிரச்னை தொடங்கியது. இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக இருப்பது பற்றி பெண்கள் பேசுகின்றனர்."
முகேஷ் கண்ணாவின் இந்தக் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன.