ஆமதாபாத்தில் கடந்த 3 நாள்களில் 24 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று
ஆமதாபாத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 24 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோன்று காந்திநகரில் இரு நாள்களில் 38 காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆமதாபாத் நகராட்சி ஆணையர் ஓ.பி.மச்ரா கூறுகையில், 'ஆமதாபாத் நகராட்சியில் மொத்தமாக 4 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதில் எஸ்.வி.பி. மருத்துவமனையில் மட்டும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 2,000 மருத்துவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இவர்களில் கடந்த 3 தினங்களில் 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் மூத்த மருத்துவர்கள்.
அதேபோன்று காந்தி நகரில் உள்ள குஜராத் போலீஸ் அகாடமியில் கடந்த இரு தினங்களில் 38 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் பயிற்சி காவலர்கள். இவர்கள் அனைவருமே அறிகுறிகள் அற்றவர்கள்' என்று தெரிவித்தார்.
நாடு முழுவதுமே கரோனா முன்களப் பணியாளர்கள் அதிகமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.