நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் 74% பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் 4,60,692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்தமாக சிகிச்சை பெறுவோரில் 48.8% ஆகும்.
அதேபோன்று உத்தரப்பிரதேசம், தமிழகம், தெலங்கானா, ஒடிசா, அசாம், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் 2,36,545 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த சிகிச்சை பெறுவோரில் 25.1% ஆகும்.
மேற்குறிப்பிட்ட 9 மாநிலங்களில் மட்டும் கரோனா சிகிச்சை பெறுவோர் 73.9% எஞ்சிய 26.1% பேர் மட்டுமே மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 1,209 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 495, கர்நாடகத்தில் 129, உத்தரப்பிரதேசத்தில் 94 பேர்.
பாதிப்பைப் பொறுத்தவரை நேற்று ஒரேநாளில் 96,551 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிரத்தில் 23,000, ஆந்திரத்தில் 10,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட 5 மாநிலங்களில் மட்டுமே புதிதாக பாதிப்பு(57%) மற்றும் குணமடைந்தோர் விகிதம்(60%) அதிகமாக உள்ளது.
இன்றைய நிலவரப்படி, நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு - 45,62,415, பலி -76,271, சிகிச்சை பெறுவோர் - 9,43,480, குணமடைந்தோர் - 35,42,664.