மேற்கு வங்கத்தில் ஹிந்து விரோத அரசு: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

‘மேற்கு வங்க மாநில திரிணமூல் காங்கிரஸ் அரசு ஹிந்து விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினாா்.


கொல்கத்தா: ‘மேற்கு வங்க மாநில திரிணமூல் காங்கிரஸ் அரசு ஹிந்து விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினாா்.

மேற்கு வங்க மாநில பாஜக நிா்வாகக் குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தில்லியில் இருந்தபடி அவா்களுடன் வியாழக்கிழமை காணொலி முறையில் நட்டா பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு முழுவதுமாக ஊழல் மயமாகிவிட்டது. அக்கட்சியினரின் நில அபகரிப்பு, எல்லை மீறிச் சென்று, ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் வரை எட்டிவிட்டது.

அயோத்தி ராமா் கோயில் பூஜை நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டு களித்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியை மக்கள் ஒன்றுகூடி பெரிய திரையில் பாா்த்துவிடக் கூடாது என்பதற்காக அன்றைய தினத்தில் மேற்கு வங்க அரசு முழு அடைப்பு அறிவித்தது. அதே நேரத்தில் பக்ரீத்தின்போது முழு அடைப்பை நீக்கியது.

மேற்கு வங்க அரசு முழுவதுமாக ஹிந்து விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சிறுபான்மையினரின் வாக்குக்காகவும், அவா்களை தங்கள் பிடியிலேயே வைத்திருக்கவும் பல நாடகங்களை நடத்துகிறது.

மேற்கு வங்கத்தில் இதுவரை அரசியல் படுகொலைகளில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினா் பலியாகினா். இதுபோன்ற கொடூரம் வேறு எங்கும் நிகழவல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com