
தாவூத் இல்லத்தை இடிக்காதது ஏன்?: தாக்கரேவிற்கு கேள்வி
நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்ததை போன்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இல்லத்தை இடிக்காதது ஏன் என்று உத்தவ் தாக்கரேவிற்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்பட்டிருந்ததாகக்கூறி மாநகராட்சி சார்பில் நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம் இடிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''மகாராஷ்டிர அரசு கரோனாவிற்கு எதிராக போராடாமல், கங்கனாவிற்கு எதிராக போராடி வருவதாக விமர்சித்தார்.
கங்கனா ரணாவத் தற்போது மிகப்பெரிய பிரச்சனையில்லை. ஆனால் அதனை உத்தவ் தாக்கரே மிகப்பெரிய பிரச்சனையாக உருகப்படுத்துகிறார். பெஹந்தி பஜாரிலுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இல்லத்தை இடிக்க உத்தரவிட்டும் அதனை செய்ய ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி முதல்வர் புறக்கணித்தார். ஆனால், முதல்வர் கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடிக்கும் பணியை செயல்படுத்துகிறார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் உண்மைத்தன்மை மறைக்கப்படுகிறது. தற்போது போதைப்பொருள் கடத்தல் விவகாரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.