மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று காலை மக்களவை கூடிய நிலையில் பிற்பகல் மாநிலங்களவை கூடியது.
கூட்டத்தின் தொடக்கத்தில், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். எம்.பி.க்கள் மூவருக்கும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, அக்டோபர் 1 ஆம் தேதி வரை 18 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதனிடையே, கடந்த இரு நாள்களாக எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் 17 மக்களவை எம்.பி.க்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.