ஜகத்சிங்புர்: ஒடிசா மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடியின் காரணமாக ஜகத்சிங்புர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த இரண்டு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிகுடாவின் சனர்புர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த மனோஜ் குமார் என்ற அறிவியல் ஆசிரியர் கடந்த மாதம் கரோனா பாதித்து உயிரிழந்தார். இவரை கைத்திபுர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
செப்டபம்பர் 11-ம் தேதி இவரது வீட்டுக்கு, பதவி உயர்வுக்கான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அலிபிங்கால் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த உதவி ஆசிரியர், உடல்நலக் குறைவால் கடந்த ஜனவரி மாதமே உயிரிழந்த நிலையில், அவரையும் ஜகத்சிங்புரில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பணி உயர்வு வழங்கியுள்ளது பள்ளிக் கல்வித் துறை.
இது குறித்து கல்வித் துறையிடம் கேட்கப்பட்டபோது, இவர்கள் உயிரிழக்கும் முன்பு, பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆசிரியர்களின் உயிரிழப்பு குறித்து தகவல் அளிக்கப்பட்டும் அது பதிவிடாமல் இருந்துள்ளது என்கிறார்கள்.