வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இதுவரை 14.12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் நோக்கில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு தரப்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், 14.12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்பியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், 'மே 7, 2020 அன்று தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டம் மூலம், 14,12,834-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம், தரைவழி மற்றும் கடல் வழியாக இந்தியா திரும்பியுள்ளனர். இப்போதைக்கு, வீட்டிற்கு கட்டாயமாக திரும்ப வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்புடன் திரும்பி வருகின்றனர். தொடர்ந்து, தாயகம் திரும்ப விரும்பும் அனைவரும் இந்தியா வர இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்' என்றார்.
மே மாதத்தில் தொடங்கிய வந்தே பாரத் திட்டத்தின் ஆறாவது கட்டப் பணி அக்டோபர் 24 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.