அச்சுறுத்தும் கரோனா: முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 1,31,968 பேருக்கு தொற்று 

கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாட்டில் முதல்முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,31,968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் கரோனா: முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 1,31,968 பேருக்கு தொற்று 

புது தில்லி: ‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாட்டில் முதல்முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,31,968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் மேலும் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:  நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்.17 -ஆம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,894 ஆக இருந்தது. இதுவே, உச்சபட்சமாக இருந்த நிலையில், 7 மாதங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை கடந்த திங்கள்கிழமை (ஏப். 5) ஒரு லட்சத்தைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது. 

இந்நிலையில், தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 780 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது தொடா்ச்சியாக 29-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் 9,79,608 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,19,13,292 குணமடைந்தனா். 24 மணி நேரத்தில் மட்டும் 61,899 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தகவல்படி, கடந்த வியாழக்கிழமை மட்டும் 13 லட்சத்து 64 ஆயிரத்து 205 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மொத்தம் 25 கோடியே 40 லட்சத்து 41 ஆயிரத்து 584 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் வெளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 9,43,34,262 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,91,511 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழப்பு அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது.  இந்த காலகட்டத்தில் மக்கள் முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிா்ப்பதற்கான வழிமுறைகளை சரிவர பின்பற்றுவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com