5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை ரூ.1000 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கத்தில் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணம் உள்ளிட்ட இதர விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை 5 மாநிலங்கள் முழுவதும் ரூ.1001.4 கோடி மதிப்பிலான பணம், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தப் பட்டியலில் முன்னணியில் தமிழ்நாடு உள்ளது. மாநிலம் முழுவதும் ரு.446.28 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ரூ.300.11 கோடியும், அசாமில் ரூ.122.32 கோடியும், கேரளத்தில் ரு.84.91 கோடியும், புதுச்சேரியில் ரூ.36.95 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.