கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் பொலிட்பியூரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதற்குத் தேவையான பொருள்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால், தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வடிகட்டிகள், திரவங்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருள்களில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், பாதுகாப்புத் துறை உற்பத்திச் சட்டத்தின் கீழ் அந்தப் பொருள்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
அந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்குமாறு இந்திய அதிகாரிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும், இதுதொடா்பாக அமெரிக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற ‘க்வாட்’ மாநாட்டின்போது, பாதுகாப்பான, விலை குறைவான கரோனா தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாகக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று அமெரிக்கா உறுதியளித்தது. இந்தியாவை சா்வதேச கரோனா தடுப்பூசி ஏற்றுமதி மையமாக்க உதவப் போவதாகவும் அந்த நாடு வாக்குறுதி அளித்தது.
ஆனால், தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான பொருள்களுக்குத் தடை விதித்துள்ளதன் மூலம், தனது வாக்குறுதியை அமெரிக்கா மீறி வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.