18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது தாமதமாவதால், அதை அரசின் தோல்வி என்று கூறுவது சரியாக இருக்காது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டிருந்தோம். கரோனா தடுப்பூசி மாநிலத்திற்கு வந்து சேராததால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாகலாம். இதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெளிவாக விளக்கியிருக்கிறாா்.
தடுப்பூசி வராததால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க முடியவில்லை. தடுப்பூசி கிடைத்ததும் அதை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் பணியைத் தொடங்குவோம். தடுப்பூசி வழங்குவதில் தாமதமானால், அதை மாநில அரசின் தோல்வி என்று கூறுவது சரியாக இருக்காது. முன்கூட்டியே தடுப்பூசி வந்து சேரவில்லை என்பது மாநில அரசின் தோல்வியாகாது. உரிய நேரத்தில் தடுப்பூசி கிடைக்கும் என்பதால், மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.
கரோனா மேலாண்மையில் மத்திய அரசு பலவகையிலும் மாநில அரசுக்கு உதவி வருகிறது. அதேபோல, உலகின் பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன என்றாா்.