
குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில், 20 வயதான மூன்றாமாண்டு கல்லூரி மாணவி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர் பழைய குண்டூரின் பரமயகுண்டா பகுதியைச் சேர்ந்த நல்லா ரம்யஸ்ரீ என்பதும், அவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை குறித்து குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளியின் பெயர் சசி கிருஷ்ணா (22) என்பது தெரிய வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை, ரம்யஸ்ரீ தனது வீட்டுக்கு அருகே உள்ள உணவகத்துக்குச் சென்ற போது அங்கு வந்த சசி கிருஷ்ணா, ரம்யஸ்ரீயை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ரம்யஸ்ரீ மறுத்ததால், அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென சசி கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யஸ்ரீயின் வயிறு உள்பட 6 இடங்களில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார்.
அங்கிருந்த மக்கள், ரம்யஸ்ரீயை அடையாளம் கண்டு, உடனடியாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், ரம்யஸ்ரீயின் செல்லிடப்பேசியை அன்லாக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகே, இந்த விவகாரத்தில் முக்கிய தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படுகொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், மாணவியின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.