விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
வழக்கமாக ஆந்திர மாநிலத்தில் ஜூன் 12ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பள்ளியின் வகுப்பறைகளை அதிகரிப்பது அல்லது பகுதிநேரமாக மாற்றுவது போன்றவற்றை பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்து, இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், வெறும் 40 முதல் 50 சதவீத மாணவ, மாணவிகளே பள்ளிகளுக்கு வருகை தந்திருந்தனர். பள்ளியின் நுழைவு வாயில்களில் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினி வழங்கப்பட்டு, சமுக இடைவெளியுடன் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்களையும், பள்ளித் தோழர்களையும் நேரில் சந்திப்பது பெரும்மகிழ்ச்சி தருவதாகக் கூறியுள்ளனர்.