மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்த சர்ச்சைக் கருத்து தொடர்பான வழக்குப் பதிவுகளை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் நாராயண் ராணே மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும் கைது அல்லது அதுதொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்க இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரியும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரம்: மத்திய அமைச்சர் நாராயண் ராணே மீது வழக்குப்பதிவு
ஆனால், அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், மனுவில் குறிப்பிட்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நடைமுறையைப் பின்பற்றுமாறும் வழக்கறிஞரைக் கேட்டுக்கொண்டது.
முன்னதாக, ராய்கட் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், “மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மற்றும் புணே காவல் நிலையங்களில் சிவசேனை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.