

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராய்காட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், “மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்” எனக் கூறியிருந்தார்.
அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மற்றும் புணே காவல் நிலையங்களில் சிவசேனை அளித்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நாசிக் காவல்துறையினர் மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை கைது செய்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மகாராஷ்டிர அரசு அரசியலமைப்பை மீறியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை மகாராஷ்டிர அரசு கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இத்தகைய நடவடிக்கையால் நாங்கள் பயப்பட மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
பாஜகவின் யாத்திரையில் எங்கள் கட்சிக்கு மக்களிடையே கிடைத்த மகத்தான ஆதரவால் சிவசேனை அச்சமடைந்துள்ளது. நாங்கள் ஜனநாயக முறையில் தொடர்ந்து போராடுவோம், பயணம் தொடரும்.” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.