பாஜக தலைவர்கள் மீது அவதூறு கருத்துகள் தெரிவித்த உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நாராயண் ராணே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ராணே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கு எதிராக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் முந்தைய பேச்சுக்களை சுட்டிக்காட்டிய ராணே பாஜகவின் யாத்திரை சிவசேனை கட்சியனரை கலக்கமடைய செய்துள்ளதால் தன்னை கைது செய்ததாகத் தெரிவித்தார்.
மேலும், “இனிபேசும்போது கவனமுடன் இருப்பேன்” எனத் தெரிவித்த ராணே பாஜக யாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் ராணே நன்றி தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படாத மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படுவதாகவும் பாஜக தலைவர்கள் மீது அவதூறு கருத்துகள் தெரிவித்த உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராணே பேட்டியில் தெரிவித்தார்.