மத்திய அமைச்சர் நாராயண் ராணே செப்டம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நாசிக் காவல் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ராணே மீது சைபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவதூறு பரப்புவது, வெறுப்புணர்வைத் தூண்டுவது உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, ரத்னகிரி மாவட்டத்தில் நாராயண் ராணே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்த நாராயண் ராணேவுக்கு ரூ. 15,000 பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நாசிக் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக நாசிக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது:
"வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக செப்டம்பர் 2-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு நாசிக் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது."