‘தீர்ப்பு வந்த பிறகும் அவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு’: ராகுல் காந்தி
லக்கிம்பூர் வன்முறை குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை வந்த பிறகும் அவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதும், வன்முறையில் ஈடுபட்டதும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனவும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.
இதையும் படிக்க | லக்கிம்பூர் வன்முறை: ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்
இதனை தொடர்ந்து, மக்களவையில் லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி இன்று ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை ராகுல் காந்தி வழங்கினார். ஆனால், ராகுல் காந்தியின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அவர்கள் எங்களை பேச அனுமதிபதில்லை, அதனால்தான் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. தீர்ப்பு வந்துவிட்டது, இதில் அமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளார், ஆகையால் விவாதிக்க வேண்டும் என கோரினோம். ஆனால், அவர்கள் விவாதிக்க விரும்பவில்லை என்றார்.
மேலும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கண்டிப்பாக ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.