ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துவருகிறது. கடந்த ஒரே வாரத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஏழே நாள்களில், 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சர்வதேச விமான போக்குவரத்துக்கு இந்தியா உள்பட பல நாடுகளும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் இந்தூரிலிருந்து துபாய் செல்ல இளம் பெண் ஒருவர் விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவருக்குச் செய்யப்பட்ட ரேப்பிட் பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு உறுதியானது. கரோனா உறுதியானதைத் தொடர்ந்து அந்த இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அந்த இளம் பெண்ணுக்கு ஏற்கனவே 4 முறை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் இரு வேறு நாடுகளில் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 2 தவணையும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி 2 தவணையும் போட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்கள் சீனோபார்ம் தடுப்பூசி போட்டிருந்தால் கூடுதலாக இன்னொரு தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். அப்படி தான் இந்த பெண்ணும் நான்கு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்.
இருப்பினும், அதையும் தாண்டி இந்த 30 வயது பெண்ணுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம் வந்ததாகவும் மோவ் நகரில் நடந்த திருமணம் ஒன்றில் இவர் கலந்து கொண்டதாகவும் டாக்டர் பிரியங்கா கவுரவ் தெரிவித்துள்ளார்.