புது தில்லி: நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக்கின் 6-வது ஆட்சிக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில், முக்கிய அமைச்சர்கள், நீதி ஆயோக் ஆட்சிக் குழு உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியம். நாட்டின் முன்னேற்றத்தில், தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்பங்களிப்பை செய்து வருகின்றன.
கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் இணைந்து செயல்படுவதுமட்டுமல்ல, மாவட்ட அளவிலும் இணைந்து செயல்படுவதாகும். ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை. இந்தியாவின் தற்சார்பு திட்டம் உலகிற்கே முன்னோடியாக இருக்கப் போகிறது.
கரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி கண்டன என்பதைப் பார்த்தோம். தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு நாம் பெரும் உதவி செய்ய வேண்டும், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில் நடைபெறும் இந்த நீதி ஆயோக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இளைஞர்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில், வங்கிக் கணக்குத் தொடங்குவோர், தடுப்பூசி மற்றும் சுகாதார வசதிகளைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோலவே, இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் இலவச மின் இணைப்புப் பெற்று ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் காண முடிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.