கல் எறிவதற்கு எதிராக சட்டம்: பிரக்யா தாக்குர் எம்.பி. ஆதரவு
மத்தியப் பிரதேசத்தில், ராமர் கோயில் கட்டுமானத்துக்காக நிதி திரட்டும் பேரணி குழுவினர் மீது கல் எறிந்தவர்களுக்கு எதிராக சட்டம் அவசியம் என்ற முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கருத்துக்கு பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு ஜனவரி 15 முதல் நிதி திரட்டப்படவுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சில அமைப்பினர் வாகனப் பேரணியைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பேசியது:
"கல்வீச்சினால் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடும். எனவே இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும், அதற்கான சட்டமும் தேவை" என்றார்.
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் பேசியது:
"ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதி திரட்டும் ராம பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு தக்க பதிலடி தந்துள்ளது. தாக்குதலானது அமைதியைக் குலைப்பதற்கான இடதுசாரிகளின் முயற்சி. இதுபோன்ற நபர்களைத் தண்டிக்க சட்டம் தேவை" என்றார் அவர்.
2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சிறப்பு தேசிய புலனாய்வு முகமையில் பிரக்யா தாக்குர் இன்று ஆஜராகியிருந்தார். அங்கிருந்து வெளியே வந்தவுடனே அவர் இதுபற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

