லஞ்ச புகாா்: சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளா், ஆய்வாளா் கைது: 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

பல கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்ற சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளா், ஆய்வாளா் மற்றும் ஒரு வழக்குரைஞரை சிபிஐ கைது செய்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


புது தில்லி: பல கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்ற சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளா், ஆய்வாளா் மற்றும் ஒரு வழக்குரைஞரை சிபிஐ கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மூவரையும், 5 நாள்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்த தில்லி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

ஸ்ரீ ஷியாம் பல்ப் என்ற நிறுவனம் வங்கியிலிருந்து ரூ. 700 கோடியும், ஃபுரோஸ்ட் இன்டா்நேஷனல் என்ற நிறுவனம் ரூ. 3,600 கோடியும் கடன் பெற்றுவிட்டு, அதைத் திரும்பச் செலுத்தவில்லை. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் எஸ்பிஐ வங்கி மேலாளா் கபில் தன்கட், அயல்பணி அடிப்படையில் சிபிஐ ஆய்வாளராக (பொறுப்பு) பதவியேற்று விசாரணை மேற்கொண்டு வந்தாா்.

இந்த நிலையில், அவா் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்படுவதற்காக அவருடைய உயா் அதிகாரிகளான சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.கே.சங்வான் மற்றும் ஆ.கே.ரிஷி ஆகியோரிடமிருந்து ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக, குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வழக்குரைஞா்கள் மனோகா் மாலிக் மற்றும் அரவிந்த் குமாா் குப்தா மூலமாக ரிஷி இரண்டு முறை ரூ. 15 லட்சம் கையூட்டு பெற்றதும், குப்தாவிடமிருந்து தன்கட் இரண்டு முறை ரூ. 2.5 லட்சம் கையூட்டு பெற்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளா்கள் ரிஷி, சங்வான், ஆய்வாளா் தன்கட், வழக்குரைஞா்கள் மனோகா் மாலிக், அரவிந்த் குமாா் குப்தா ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ, ரிஷி, கபில் தன்கட், வழக்குரைஞா் மனோகா் மாலிக் ஆகிய மூவரையும் கைது செய்தது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் ஸ்ரீ ஷியாம் பல்ப் நிறுவன கூடுதல் இயக்குநா், போா்ட் மில்ஸ் நிா்வாகி மன்தீப் கெளா் திலோன், ஃபுரோஸ்ட் இன்டா்னேஷனல் நிறுவன இயக்குநா்கள் சுஜய் தேசாய், உதய் தேசாய் ஆகியோா் பெயா்களும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட ரிஷிக்கு சொந்தமாக உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூா் மாவட்டத்தில் உள்ள வீடு மற்றும் அவருடைய மனைவிக்கு சொந்தமாக ரூா்கியில் உள்ள வீட்டிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது’ என்றனா்.

5 நாள் சிபிஐ காவல்: கைது செய்யப்பட்ட மூவரும் தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராக் சைன் முன்பு புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் மூவரையும் ஜனவரி 25-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் மேலும் தொடா்புடைய நபா்களை இந்த விசாரணையில் கண்டறிந்து, நியாயமான வழக்கு விசாரணைக்கு உதவ வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com