டெல்டா பிளஸ் ஆபத்தானது என்பதற்குப் பெரிதளவில் ஆதாரம் இல்லை: தில்லி எய்ம்ஸ் இயக்குநர்
கரோனா டெல்டா பிளஸ் வகை அதிக உயிரிழப்புகளை உண்டாக்கும் என்பதற்குப் பெரிதளவில் ஆதாரம் இல்லை என தில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
"டெல்டா பிளஸ் வகை அதிக பாதிப்பைக் கொண்டது, அதிகளவில் உயிரிழப்புகளை உண்டாக்கும் அல்லது நோய்த் எதிர்ப்பு ஆற்றலில் இருந்து தப்புவதற்கு ஏற்ப குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் கொண்டுள்ளது என்பதற்குப் பெரிதளவில் தரவுகள் இல்லை. ஆனால், நாம் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டால், புதிதாக உருவாகும் எந்தவொரு வகை கரோனாவிடமிருந்தும் நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.
மருத்துவர்கள் கடந்த ஒரு ஆண்டாக கரோனாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். அவர்களது பணியை நாம் பாராட்ட வேண்டும். தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். அவர்களை நினைவில்கொள்ளும்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் மேற்கொண்டு அதிகரிக்காமல் இருப்பதற்கான சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.
கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி குறையும்."
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.