எல்கர் பரிஷத்-மாவோயிஸ்டுகள் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தது.
எல்கர் பரிஷத்–மாவோயிஸ்டுகள் வழக்கில் ஸ்டேன் சுவாமி கடந்தாண்டு அக்டோபர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். தலோஜா சிறையில் இருந்த ஸ்டேன் சுவாமி கரோனா தொற்று மற்றும் பார்கின்சன் நோயினால் அவதிப்பட்டு வருவதால் மருத்துவ உதவி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மே 29 முதல் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், ஸ்டேன் சுவாமியின் ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனையின் இயக்குநர் இயான் டி சௌசா நீதிமன்றத்தில் கூறியது:
“ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்டேன் சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதிலிருந்து அவர் மீளவில்லை. இன்று பிற்பகல் அவர் மரணமடைந்தார்.”